ஆப்கானில் பயங்கரம்.. சமையல் எரிவாயு ஆலை வெடிவிபத்தில் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஹேரட் நகரில் சமையல் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகாமையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 10 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் ஆலையில் ஏற்பட்ட விபத்தால் நிகழ்ந்ததா அல்லது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இவ்விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேர் ஹேரட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரின் விளைவாக வீடுகளை இழந்து விபத்து நிகழ்ந்த இந்த சமையல் எரிவாயு ஆலையின் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களின் குழந்தைகள் இந்த விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.