அரசியல் சிக்கலில் ஆப்கன்.. அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள்
காபுல்: 2001ம் ஆண்டு தாலிபான்கள் பிடியில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் அதன்பிறகு தற்போது மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்கிறது. அந்த நாட்டின் மிக மூத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை இவ்வாரம் ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.
ஆப்கன் அதிபர் அஷ்ரப் ஹனியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஹனீப் அட்மர் தனது பதவியை கடந்த சனிக்கிழமை, ராஜினாமா செய்தார்.
ஆச்சரியம் என்னவென்றால், இவரது ராஜினாமாவை அதிபர் ஏற்றதோடு, அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதராக பணியாற்றி வந்த ஹம்துல்லா மொகீப்பை புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார்.
அமைச்சர்களும் ராஜினாமா
ஆனால், ஞாயிற்றுக்கிழமை அரசியல் சிக்கல் மேலும் பெரிதானது. பாதுகாப்பு அமைச்சர் தாரிக் ஷா பஹ்ரமி, உள்துறை அமைச்சர் வாயிஸ் அகமது பர்மாக் மற்றும் ஆப்கன் தேசிய பாதுகாப்பு இயக்குநரக தலைவராக இருந்த மசூம் ஸ்டானெக்சாய் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
விமர்சனங்கள்
இம்மூவர் மீதும் எதிர்க்கட்சிகளும், தேசிய மீடியாக்களும் தொடர் விமர்சனங்களை முன் வைத்து வந்தது. அதிலும், கடந்த வாரம் தாலிபான்கள் ஆப்கன் அதிபர் பங்கேற்ற பக்ரீத் விழா நிகழ்விடம் அருகே ராக்கெட் குண்டுகளை வீசியபோது இந்த விமர்சனங்கள் இன்னும் அதிகரித்தன.
ராஜினாமா ஏற்பு இல்லை
ஆனால், இம்மூவர் ராஜினாமாக்களையும் அதிபர் ஹானி ஏற்கவில்லை என்றும், பணியில் இருந்தபடி முன்பைவிட இருமடங்கு அதிகம் உழைத்து, ஆப்கன் பாதுகாப்பை உறுதி செய்ய அதிபர் கேட்டுக்கொண்டதாகவும், அதிபரின் செய்தித்தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.
அமெரிக்கா நிலைப்பாடு
இதனிடையே, செவ்வாய்க்கிழமை, வாஷிங்டன்னில் நிருபர்களை சந்தித்த, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ், ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்து வருவதாகவும், தாலிபான்கள் பேச்சுவார்த்தையை நோக்கி வருவதாகவும், இதன் மூலம், ஆப்கன் உள்நாட்டு போர் முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் கூறினார்.