அழுத குழந்தைக்கு பாலூட்டியபடியே பல்கலைத் தேர்வு எழுதிய ஆப்கன் பெண்... குவியும் பாராட்டுகள்!
குழந்தைக்கு பாலூட்டிய படியே பல்கலைத் தேர்வு எழுதிய ஆப்கன் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காபூல்: ஆப்கானிஸ்தானில் இரண்டு மாத குழந்தைக்கு பாலூட்டியபடி இளம்பெண் ஒருவர் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதுவும் தலிபான்களின் ஆட்சி காலத்தில் நிலைமை இன்னும் மிக மோசம்.
இந்நிலையில் நில்லி நகரத்தில் உள்ள நசிர்கோசா பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தாய்குந்தி மாகாணத்தைச் சேர்ந்த ஜகான் தாப் என்ற பெண் கலந்து கொண்டார்.
25 வயதான ஜகான் மூன்று குழந்தைகளுக்கு தாய். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. இவரது கணவர் ஒரு விவசாயி.
இந்த சூழ்நிலையில் தான் பல்கலைக்கழகத் தேர்வு எழுத கணவருடன் வந்தார் ஜகான். குழந்தையை கணவரிடம் கொடுத்து விட்டு அவர் தேர்வெழுதத் தொடங்கினார். தேர்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே குழந்தை பசியால் அழத் தொடங்கியது.
இதனால் கணவரிடம் இருந்து குழந்தையை வாங்கிய ஜகான், நாற்காலியில் இருந்து கீழே இறங்கி தரையில் அமர்ந்து, குழந்தைக்கு பாலூட்டியபடி ஜகான் தாப் தேர்வு எழுதினார். இதை பார்த்த அனைவரும் வியப்பின் உச்சிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் குழந்தை உறங்கிய போதும், அதனை மடியில் தூங்க வைத்தவாரே தனது தேர்வை அவர் எழுதினார்.
இந்தக் காட்சியை அங்கிருந்த பல்கலைக்கழக பேராசிரியர் யாயா இர்பான் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த சக்திவாய்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
பல்வேறு நாடுகளில் உள்ள மகளிர் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் ஜகான் தப்பை பாராட்டி வருகின்றனர். 'கல்வி ஒன்றே பெண் சுதந்திரத்திற்காக சிறந்த வழி. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியே வருவதற்கே அஞ்சி வரும் நிலையில், ஜஹான் தாப், தைரியமாக வெளியே வந்து தேர்வெழுதி மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்’ என்று அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.