மோடியை ஆப்கன் அதிபர் சந்தித்த அதே நாளில்.. இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் திடீர் ராஜினாமா
காபுல்: ஆப்கன் அதிபர் அஷ்ரக் ஹனி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அதே நாளில், இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் ஷைதா முகமது அப்தலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனது 20 வருடங்களுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில், இந்தியா எனக்கு வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை தந்தது மட்டுமல்லாது, அறிவு செல்வத்தையும் வழங்கியது என்று தனது ராஜினாமா முடிவை ட்வீட் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்வீட்டுகளில் கூறுகையில், இந்திய அரசுக்கும், நட்புறவோடு பழகும் இந்திய மக்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிக சிறப்பான விருந்தோம்பல், அன்பு, நட்பு ஆகியவற்றை இந்தியா எனக்கு அளித்தது. ஆப்கனுக்காக இந்தியாவில் இருந்து பணியாற்றினேன். இனிமேல் எனது தாய் நாட்டில் இருந்தபடியே அதற்காக பணியாற்ற நேரம் வந்துள்ளது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2012ம் ஆண்டு அப்தலி இந்தியாவுக்கான ஆப்கன் தூதராக பதவியேற்றார். நேற்று ஆப்கன் அதிபர் அஷ்ரக் ஹனி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில், ஆப்கன் தூதர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கனில் சமீபத்தில் உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.