ஆப்கானிஸ்தானில் பயங்கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்
காபூல்:ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பேருந்தில் பயணித்த 32 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
அந்நாட்டின் ஃபரா மாகாணத்தில், பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கந்தாஹர்- ஹேரத் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து பேருந்து சிதறியது. இதில் பேருந்தில் பயணித்த, குழந்தைகள், பெண்கள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 17க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை ஃபரா மாகாண ஆளுநர் அலுவலகம் உறுதி செய்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் தீவிரவாத தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயன்று வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக தீவிரவாத தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற செப்டம்பர் 28 ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆப்கானிஸ்தான் துணை அதிபர் தேர்தலில், அம்ருல்லா சாலோ என்பவர் போட்டியிடுகிறார். நேற்று, காபூலில் உள்ள தனது அலுவலகத்தில் அம்ரகுல்லா சாலோ இருந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய காருடன் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள், கொடூர தாக்குதலை அரங்கேற்றினர்.
கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில், 20 பேர் பலியானார்கள். கட்டிடம் சேதம் அடைந்த நிலையில், துணை அதிபர் வேட்பாளர் அம்ருல்லா, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.