4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து பழிவாங்கிய ஆப்கான் உள்ளூர் ஆயுத குழு!!
ஜலால்பாத்: ஆப்கானிஸ்தானில் 4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைகளைத் துண்டித்து ஆப்கான் உள்ளூர் ஆயுத குழு ஒன்று பழிவாங்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கு எதிராக தலிபான்கள் யுத்தம் நடத்தி வருகின்றனர். ஆனால் தலிபான்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி சில பகுதிகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
ஆப்கான் ராணுவம், தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஆகியவை இல்லாது செல்வாக்கு பெற்ற நபர்கள் தங்களது பகுதியில் தங்களுக்கான ஆயுதக் குழுக்களையும் தனித்தனியே வைத்திருக்கின்றனர். இத்தகைய தனிநபர் ஆயுதக் குழுக்களின் கை சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஓங்கியும் வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானின் கிழக்கு மாகாணமான நங்கார்காரில் ஆசின் மாவட்டத்தில் உள்ளூர் ஆயுத குழுக்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். இயக்கத்துடன் மோதி வரும் உள்ளூர் ஆயுதக் குழுவானது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஹாஜி ஜாஹிரின் ஆதரவாளர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஹாஜி ஜாஹிரின் ஆயுத குழுவைச் சேர்ந்த 4 பேரை கடத்திச் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களது தலைகளைத் துண்டித்தனர். இதற்கு பதிலடியாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 4 பேரை கடத்தி வந்து அவர்களது தலைகளை துண்டித்து சாலையில் வீசியுள்ளனர் ஹாஜி ஜாஹிரின் ஆயுதக் குழு.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹாஜி ஜாஹிர், அவர்கள் உங்கள் தலையை வெட்டும் போது நீங்க என்ன அவர்களுக்கு இனிப்பையா சமைத்து போடுவீர்கள்? என்று எகிறியிருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்த சம்பவத்துக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசுத் தரப்பும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், உள்ளூர் ஆயுதக் குழுக்கள் விஸ்வரூபமெடுத்து வருவது தென்னாசிய பிராந்தியத்தின் அமைதிக்கு பெரும் வேட்டு வைக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.