முடிவுக்கு வந்த 18 வருட நீண்ட யுத்தம்.. அமெரிக்கா-தாலிபான்கள் இடையே கையெழுத்தானது அமைதி ஒப்பந்தம்
தோஹா: அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதையடுத்து படிப்படியாக படைகளை ஆப்கனிலிருந்து விலக்க உள்ளது அமெரிக்கா. இதன் மூலம் 18 ஆண்டு கால நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
கத்தார் நாட்டின், தோஹா நகரில் வைத்து இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னதாக, அனைத்து போராளிகளுக்கும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும், தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்று தலிபான் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்னர், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புக்கள் 14 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர் நாடுகளைச் சேர்ந்த சுமார் 17,000 துருப்புக்களும், அமெரிக்காவை சேர்ந்த 14,000 வீரர்களும், போரில் ஈடுபடாமல் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் எண்ணிக்கை 8,600 ஆகக் குறைக்கப்படும். 135 நாட்களுக்குள் அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தில் மற்ற நிபந்தனைகள் முழுமையாக செயல்படுத்தும் என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுடன் இணைந்து மே 29க்குள் தாலிபான் உறுப்பினர்களை பொருளாதாரத் தடை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
2001ல் அதிகாரத்திலிருந்து தாலிபான்கள் விரட்டப்பட்டனர். அது முதல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு எதிராக தாலிபான்கள் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் நிர்வாகம் இந்த போர் நிறுத்தத்திற்கு 2018ல் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
சமாதான ஒப்பந்தத்தின் மூலம், 5,000 தலிபான் உறுப்பினர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளனர். இதுவரை ஆப்கன் அரசை மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை ஆட்சி என்று கூறி, தாலிபான் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசுடன், மார்ச் 10 ஆம் தேதி தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளனர்.
1990 களின் முற்பகுதியில் முஜாஹிதீன்களின் ஆப்கானிஸ்தான் பிரிவினரால் தாலிபான் உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த இஸ்லாமிய போராளிகள் (1979-89) அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் ஆதரவுடன், தாலிபான்கள் செயல்பட்டனர். 1996 முதல் 2001 வரை, ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி நடந்தது. ஒரு காலத்தில் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட அதே தாலிபான்கள், ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு, அமெரிக்காவால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.