ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை முன் மனித குண்டு வெடிப்பு.. 12 பேர் பலி.. 31 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில், கடந்த ஒரு வாரமாக மாற்றி மாற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் நடந்த தாக்குதலில் 22 பேர் மரணம் அடைந்தனர். இந்தநிலையில் இன்று காபூலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் முன் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
ரம்ஜான் மாதம் என்பதால் அலுவலகத்திற்கு மதியத்திற்கு மேல் விடுமுறை விட்டுள்ளனர். அப்போது, பணியாளர்கள் எல்லோரும் வெளியேறும் நேரம் பார்த்து வெடிகுண்டு வெடித்துள்ளது.
வெடிகுண்டு கட்டி வந்திருந்த தீவிரவாதி, கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சக அலுவலகம் முன்பு வெடிகுண்டை செயல்படுத்தி உள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இதில் மொத்தம் 31 பேர் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரம்ஜான் மாதத்தில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.