ஆப்பிரிக்க நாடுகளை பற்றி மகா மட்டமாக பேசிய டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
சர்ச்சை நாயகனான ட்ரம்ப் இப்போது ஆப்பிரிக்க நாடுகளை பற்றி பேசி மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.
அப்போது அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் ஒரு மோசமான வார்த்தையை குறிப்பிட்டு ஆப்ரிக்க நாடுகளை பற்றி, ட்ரம்ப் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு உடனடியாக அவரது குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இணைந்தே கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த பேச்சு பற்றி அறிந்த ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
டிரம்பின் பேச்சு இனவெறியுடன் கூடியது என கண்டித்துள்ள அந்த நாடுகள் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆனால் தனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.