செவ்வாயில் மலை ஏறப் போகும் "2 வயது" கியூரியாசிட்டி..!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகளைக் முடித்துள்ள அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம், அடுத்து ஒரு பெரிய வேலையில் இறங்கவுள்ளது. அதாவது பெரிய மலை ஒன்றில் அது ஏறப் போகிறது.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது கியூரியாசிட்டி. தற்போது 2 வயதை பூர்த்தி செய்துள்ள இந்த விண்கலம், இதுவரை பல பிரமிப்பூட்டும் தகவல்களையும், ஆச்சரியங்களையும் பூமிக்கு அளித்துள்ளது. உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை முழுமையாக தன் வசப்படுத்திய நாள் அது.
செவ்வாய்க்குப் போன சில நாட்களிலேயே அது பல தகவல்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது. செவ்வாய் குறித்த பல கற்பனைகளையும், நிஜத்தையும் அது மாற்றிப் போட்டது.
மெளன்ட் ஷார்ப்
ஆனால் தற்போதுதான் செவ்வாய் கிரகத்திற்கு அது அனுப்பப்பட்ட உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும் வேலையில் தீவிரமாக இறங்கவுள்ளது. அதாவது மெளன்ட் ஷார்ப் என்று பெயரிடப்பட்டுள்ள மிகப் பெரிய மலையில் அது ஏறப் போகிறது.
அடிவாரத்தில் கேம்ப்
இந்த மலையின் அடிவாரத்தில் தற்போது கியூரியாசிட்டி இருக்கிறது. மலையின் உயரம் 5.5 கிலோமீட்டர் ஆகும். இந்த மலையில்தான் தற்போது ஏறப் போகிறது கியூரியாசிட்டி.
மனிதர்கள் வாழ முடியுமா
அணு சக்தியில் இயங்கும் நடமாடும் ஆய்வகமான இந்த கியூரியாசிட்டி விண்கலமானது, தற்போது செவ்வாய் கிரகத்தில் பல மைல் தூரத்திற்கு நகர்ந்து விட்டது. செவ்வாயில் மனிதர்கள் வாழத் தகுதியான சூழ்நிலை இருக்கிறதா என்ற ஆய்வுக்குத் தேவையான பல தகவல்களை அது அளித்து வருகிறது.
ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்
ஒரு காலத்தில் இங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்று கருதக் கூடிய சாத்தியக் கூறுகளை அது கடந்த 2012 செப்டம்பர் மாதம் பூமிக்குத் தெரிவித்தது. ஒரு முன்னாள் நீரோடையை அது கண்டுபிடித்துப் புகைப்படமாக அனுப்பி வைத்திருந்தது. இந்த ஓடையானது, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஓடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
குடிநீரும் இருந்திருக்கலாம்
இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எல்லோநைப் பே என்ற ஒரு மலைப்பாறையை அது சில மாதங்களுக்கு முன்பு குடைந்து அதிலிருந்து சில மாதிரிகளை எடுத்து சோதனை செய்தது. அதன் மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு விஞ்ஞானிகள் வந்தனர். மேலும் குடிநீரும் கூட அங்கு இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
ஏரி இருந்திருக்கலாம்
மேலும் கியூரியாசிட்டி இருந்த இடத்தில் முன்பு பெரிய ஏரி இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் விஞ்ஞானிகளுக்கு உள்ளது. எனவே ஒரு காலத்தில் செவ்வாயில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் விஞ்ஞானிகள் வந்தனர்.
கேல் கிரேட்டர்
தற்போது கியூரியாசிட்டி விண்கலம் உள்ள இடமானது கேல் கிரேட்டர் என்று அழைக்கப்படுகிறது. ஷார்ப் மலையைச் சுற்றியுள்ள தரைப்பரப்புதான் இந்த கேல் கிரேட்டர். இந்தப் பகுதியைத்தான் விஞ்ஞானிகள் குறிப்பாக குறி வைத்து ஆய்வுகளைத் தொடர்ந்துவருகின்றனர். மேலும் ஷார்ப் மலையிலிருந்து நமக்கு பல முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானிகளுக்கு உள்ளது.
பல மைல் தூரம் போக வேண்டும்
இதுகுறித்து இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானியும், கியூரியாசிட்டி திட்ட துணை விஞ்ஞானியுமான அஸ்வின் வசவதா கூறுகையில், ஷார்ப் மலையைச் சுற்றிலும் ஒரு காலத்தில் நீர் நிறைந்திருக்கலாம் என்று கருதுகிறோம். இங்கு உயிரினங்களும் வசித்திருக்கலாம் என்பதும் எங்களது நம்பிக்கை. அதுகுறித்த பல சந்தேகங்கள் கியூரியாசிட்டி மூலம் கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. ஆனால் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியுள்ளது ஆய்வுகள் என்றார்.
சக்கரம் ஓ.கே.