விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப் பின் பேரன்கள் முன்னிலையில் மறுமணம் செய்யும் தாத்தா-பாட்டி!
அமெரிக்காவில் விவாகரத்தான தம்பதி ஒன்று 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள உள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் வயதான தம்பதி ஒன்று மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் .
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹோலண்ட் (83). கடந்த 1955ம் ஆண்டு இவருக்கும் பார்ன்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதி, கடந்த 1967ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள், தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.
பிரிந்து வாழ்ந்த போதும் இரண்டு குடும்பத்தினரும் நண்பர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவருமே கடந்த 2015ம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர்.
மகன், மகள்கள் எல்லாம் திருமணமாகி சென்றுவிட, தனிமையில் வாழ்ந்து வந்த இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே, மீண்டும் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக வரும் 14ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர். அமைச்சராக உள்ள அவரது பேரன் இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார்.
“கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் - பார்ன்ஸ் ஜோடி கூறுகின்றனர்.
50 ஆண்டுகள் கழித்து மறுமணம் மூலம் மீண்டும் கணவன் - மனைவியாகப் போகும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.