ஐரோப்பா- ஆசியா இடையே விமானங்கள் பறக்க தடை விதிப்போம்: ரஷ்யா 'வார்னிங்'
மாஸ்கோ: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதற்கு பதிலடியாக ஐரோப்பா மற்றும் ஆசியா இடையேயான விமானங்கள் தங்களது நாட்டு வான்பரப்பில் பறப்பதற்கு தடை விதிப்போம் என்று ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைனில் உள்நாட்டு கிளர்ச்சியை ரஷ்யா தூண்டிவிடுகிறது என்று மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து வருகின்றது. இதனை ரஷ்யா மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதனிடையே ரஷ்யா பிரதமர் திமித்ரி மெத்வேதேவ் மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து கூறுகையில், ரஷ்யா மீது உணவுப் பொருள் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்துபட்ட அளவில் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடை விதித்து வருகிறது.
இதற்கு பதிலடியாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிடையேயான விமான போக்குவரத்தை நாங்கள் தடை செய்வோம். அதனால் மிகப் பெரிய அளவிலான எரிபொருள் செலவு நெருக்கடியை மேற்குல நாடுகள் எதிர்கொண்டாக நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
அப்படி ரஷ்யா தடை விதித்தால் ஐரோப்பிய விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக அமைந்துவிடும். நாள்தோறும் ஜப்பானுக்கு ஏராளமான விமானங்களை ஐரோப்பிய நாடுகள் இயக்கி வருகின்றன. அதேபோல் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இயக்குகின்றன.
இவை அனைத்துமே மிகக் கடுமையாக பாதிக்கப்படும். ரஷ்யாவின் இந்த எச்சரிக்கைக்குப் பின்னர் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் பங்குகள் மிகக் கடுமையான சரிவையும் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.