சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒருவர் பலி, ஒரு நாளில் 52 பேருக்கு பாதிப்பு
சியோல்: சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நாடாக தென்கொரியா மாறி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. எனினும் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை அரசு அறியும் முனபே அதாவது ஜனவரி 10ம் தேதிக்கு முன்பே பலருக்கும் மூச்சு காற்று மூலம் பரவியது.
அதன்பிறகு சீன அரசு வுகான் நகரை மூடத்தொடங்கிய போதிலும் ஜனவரி 23ம் தேதிக்கு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்தது. தினமும் 2000 பேருக்கு பாதிப்பு ஏற்பட ஆரம்பித்த நிலையில், இரட்டை படையில் தொடங்கிய உயிரிழப்பு 100 இலக்கமாக மாற ஆரம்பித்தது. வுஹான் நகரத்திலிருந்து சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவ
75465 ஆக அதிகரிப்பு
இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சீனாவில் 118 பேர் கொரோனாவினால் உயிரிழந்தார்கள். புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 889 பேரையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக உயர்ந்துள்ளது.
வெகுவாக குறைவு
அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். சீனாவில் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
பாதிப்பு அதிகம்
ஆனால் சீனாவின் அண்டை நாடானான தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டேகு மற்றும் சியோங்டோ ஆகிய இரண்டு நகரங்களிலும கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சிறப்பு பராமரிப்பு மண்டலமாக அறிவித்து போர்கால நடவடிக்கைகளை தென்கொரியா எடுத்து வருகிறது.
156 ஆக உயர்வு
இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தென்கொரியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளார்கள். இதன் மூலம், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தென்கொரியாவில 156ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் தென் கொரியாவில் ஒருவர் உயிரிழந்திருப்பதையும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
61 வயது பெண்
ஷின்ச்சியான்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் குழுவை சேர்ந்த 61 வயதாகும் பெண் ஒருவருக்கு உண்டான கொரோனா தொற்றே தென்கொரியாவின் டேகு நகரில் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் என நம்பப்படுகிறது. அவருடை குழுவைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் தேடி கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க தென்கொரியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.