பயனாளிகளின் தகவல்களை விலைக்கு விற்ற டிவிட்டர்.. பேஸ்புக் போலவே முறைகேடு!
பேஸ்புக் நிறுவனம் மக்களின் தகவல்களை முறையின்றி திருடியது போலவே, டிவிட்டரும் மக்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறது.
நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் மக்களின் தகவல்களை முறையின்றி திருடியது போலவே, டிவிட்டரும் மக்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு மக்களின் விவரங்களை டிவிட்டர் விற்று இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. இந்த நிலையில்தான் தற்போது டிவிட்டர் நிறுவனமும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
யார்
பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவல்கள் எல்லாம் , அலெக்சாண்டர் குஹன் என்பவர் மூலம்தான் வெளியானது. பேஸ்புக்கில் ஒரு அப்ளிகேஷன் மூலம் மக்களிடம் சில தகவல்களை இவர் பெற்றுள்ளார். அதன்பின் அவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கான அனுமதியை பேஸ்புக் மூலம் முறையின்றி பெற்று தகவல்களை திருடியுள்ளார். பின் அந்த தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார். இப்படித்தான் பேஸ்புக்கில் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.
டிவிட்டரில் முறைகேடு
இதே நபர்தான் ''குளோபல் சைன்ஸ் ரிசர்ச்'' என்று நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு டிவிட்டரிடம் இருந்து சில தகவல்களை பெற்று இருக்கிறது. டிவிட்டரில் பயனாளிகளின் தகவல்களை, அவர்களுக்கு தெரியாமல், டிவிட்டர் இவருக்கு கொடுத்து இருக்கிறது. தற்போது, இந்த நிறுவனத்திற்கு தகவல்கள் விற்கப்பட்டதை டிவிட்டர் ஒப்புக்கொண்டு இருக்கிறது.
நடக்கும்
டிவிட்டர் பொதுவாக பணத்திற்காக இப்படி பயனாளிகளின் தகவல்களை விற்பது வழக்கம். தனியார் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் இப்படி தகவல்களை அந்த நிறுவனம் விற்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்தான் அந்த தனியார் நிறுவனம் நம்முடைய டிவிட்டர் கணக்கை சோதிக்க முடியும். முக்கியமாக நாம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ்களை அந்த நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த தகவல்களை மிகவும் நல்ல விஷயங்களுக்கு மட்டும் விற்றுள்ளதாக டிவிட்டர் கூறியுள்ளது.
ஆனால் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா
ஆனால் தற்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவிற்கு நெருக்கமான நபருக்கு இப்படி விவரம் வெளியாகி இருப்பது டிவிட்டர் நிறுவனத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-2015 வரை கோடிக்கணக்கான மக்களின் டிவிட்டர் தகவல்கள் அவருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் இதை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு கொடுத்தாரா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.