அணு ஆயுத போர் மிரட்டல்.. இப்படி ஒரு பதிலடியை நிச்சயமாக இம்ரான்கான் எதிர்பார்த்திருக்க மாட்டாரு
பிரெசெல்ஸ்: தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா எந்த பேச்சுவார்த்தை நடத்தும் .அதுவரை எந்த வாய்ப்பும் இல்லை என பெல்ஜியத்தில் இந்திய வெளியுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டின் பிரெசெல்ஸ் நகரில் பொலிடிக்கோ வார இதழுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜம்மு காஷ்மீருக்காக அணு ஆயுத போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தது குறித்து கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பாகிஸ்தான் இம்ரான்கானின் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், "தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானின் எங்கோ ஒரு மூலையில், இருட்டில் இருந்து நடத்தப்படவில்லை. நேரடியாகவே பட்டபகலில் நடத்தப்படுகிறது. தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், அதற்காக நீண்ட காலமாக நிதியுதவி செய்து வருகிறது. அத்தகைய செயல்களை நிறுத்தாவிட்டால் புதுடெல்லி- இஸ்லாமாபாத்(இந்தியா பாகிஸ்தான்) இடையே பேச்சுவார்த்தை என்பதற்கு வாய்ப்பே இல்லை.
தீவிரவாத செயல்பாடுகளை தடுத்து நிறுத்த காஷ்மீரில் தகவல் தொடர்பை துண்டிப்பது அவசியமானது. இது மக்களை ஓரளவு சிரமத்திற்கு உள்ளாக்கியது. ஒருபுறம் தீவிரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் தகவல் தொடர்பை துண்டிக்கும் நான் அதேநேரம் மக்களுக்கு எப்படி இணையத்தை திறந்து வைப்பது. இதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காஷ்மீரில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். போலீசார் அவர்களின் வழக்கமான பணிகளில் ஈடுபட போகிறார்கள். காஷ்மீரில் படைகள் படிப்படியாக குறைக்கப்படும்.
இந்து தேசத்திற்காகவே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக இம்ரான் கான் கூறியதை திட்டவட்டமாக மறுக்கிறேன். இதை சொல்பவர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியவில்லை என்று தான் நான் செல்வேன். அவர் சொல்வது போல் இந்தியாவின் கலாச்சாரம் இல்லை. மாநிலங்களின் அதிகாரங்களை இந்திய அரசு குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை,. ஜம்மு காஷ்மீரின் சூழ்நிலை என்பது வேறு" இவ்வாறு கூறினார்.