இஸ்லாமாபாத் இந்திய தூதரக அதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு.. பழிக்குப் பழியாம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த அந்நாட்டுக்கான டெல்லி தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றுவதற்கு பழிவாங்கும் விதமாக, இந்திய தூதரக அதிகாரியை 2 நாட்களுக்குள், தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய மெகமூத் அக்தர் என்பவர் ராணுவ ரகசியங்களை களவாடி பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றதை மத்திய உளவுத்துறை கையும் களவுமாக கண்டுபிடித்தது.
இந்திய ராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் மேப்கள், இந்திய படைகளின் நகர்வு, ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மெகமூத் அக்தர், நாளைக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதரகத்தில் பணியாற்றிவரும் அதிகாரியான சுர்ஜீத் சிங் என்பவரை விரும்பத்தகாதவர் என அறிவித்து, 48 மணிநேரத்துக்குள் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.