மழையை தொடர்ந்து வெயில்.. ஜப்பானில் வீசும் கொடூர அனல் காற்று.. 4 நாட்களில் 34 பேர் பலி
ஜப்பானில் வீசி வரும் மோசமான அனல்காற்று காரணமாக இதுவரை அங்கு 34 பேர் பலியாகி உள்ளனர்.
டோக்கியோ: ஜப்பானில் வீசி வரும் மோசமான அனல்காற்று காரணமாக இதுவரை அங்கு 34 பேர் பலியாகி உள்ளனர்.
உலக வரலாற்றில் ஜப்பான் இன்னொரு பேரழிவை சந்தித்து இருக்கிறது. கடந்த வாரம் மழையால் அவதிப்பட்ட நாடு தற்போது வெயிலால் அவதிப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக அனல்காற்று அந்த நாட்டை உலுக்கி இருக்கிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கணிசமான உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
மழை மரணம்
கடந்த சில நாட்களாக ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்தில் அங்கு சுமார் 1050 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும். இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 230 பேர் பலியாகி உள்ளனர். இதனால் 400 பேர் காணவில்லை. இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 20 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
உடனே மாறியது
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த நாட்டின் வானிலை அப்படியே மாறியது. அதிசயமாக வெயில் அடிக்க தொடங்கியது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டு இருந்த நாட்டில் அனல்காற்று வீச தொடங்கியது. ஆனால் விபரீதம் அப்போதும் புரியவில்லை. அனல்காற்றின் அளவும் வெப்பமும் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருந்தது.
பெரிய அளவில் அதிகம்
அங்கு நொடிக்கு நொடி வெப்பநிலை அதிகமாகி 34 டிகிரி செல்ஸியஸை தாண்டியது. அங்கு 34 டிகிரி செல்ஸியஸ்தான் அதிக வெப்பநிலை. ஆனால் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வடக்கு ஜப்பானில் நிலவியது. வெப்பமான காற்றின் வேகமும் அதிகமானது, மழை பெய்து வெள்ளம் வந்த பகுதியில் கூட வெயில் தற்போது சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது.
எத்தனை மரணம்
இந்த நிலையில் இந்த வெயில் காரணமாக இதுவரை 1000க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் இந்த வானிலையால் 34 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு மழையால் பாதிக்கப்பட்டவர்களே பெரிய அளவில் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.