தாலிபான்கள் கொடுக்கும் பூஸ்ட்.. சர்வதேச நாடுகளுக்கு காத்திருக்கும் 'பேரபாயம்..' அடுத்து என்ன
காபூல்: ஆப்கனை இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசிய பயங்கரவாத கண்காணிப்பு போர்டல் தெரிவித்துள்ளது
Recommended Video
ஆப்கனில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைபற்றிய தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளனர்.
ஆப்கனில் மீண்டும் தாலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கியதுமே அனைவருக்கும் எழுந்த ஒரே கேள்வி 1996 - 2001 வரை இருந்த நிலைக்கு ஆப்கன் தள்ளப்படுமா என்பது தான்.
ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு: முகச் சவரம் செய்யத் தடை
ஷேவ் செய்ய தடை
ஆனால், தாங்கள் முன்பு போல இல்லை என்றும் இந்த முறை அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாக இருக்கும் என்று தாலிபான்கள் தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஆப்கனில் தாலிபான்கள் பெற்றுள்ள வெற்றி, உலகின் மற்ற நாடுகளில் உள்ள அடிப்படைவாத குழுக்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக ஆப்கனில் அண்டை நாடான பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உச்சம் தொடும் பயங்கரவாதம்
ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசியப் பயங்கரவாத கண்காணிப்பு போர்டல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் கடந்த சில வாரங்களில் மட்டும் உச்சத்தைத் தொட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டில் அதிகரிக்கும் நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒரே மாதத்தில் 35 தாக்குதல்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் 35 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் மொத்தம் 52 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2017 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு. தாலிபான் அமைப்பின் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத பிரிவுகளே பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்துவதாக நம்பப்படுகிறது. ஆப்கானைக் கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தானையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தாலிபான்களே ஊக்குவிப்பதாகவும் கூறப்படுகிறது.
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு
பாகிஸ்தானில் தாலிபான்கள் என்று அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயக அரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கு அல் கொய்தா மட்டுமின்றி பல்வேறு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆப்கனில் தாலிபான்களில் வலிமை அதிகரிக்கத் தொடங்கியதுமே, இந்த அமைப்பின் செயல்பாடுகளும் அதிகரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டால், அது பேரபாயமாக முடியும்.
முடிவெட்டத் தடை
அதேபோல ஆப்கனிலும் தாலிபான்களின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்கனில் ஹெல்மண்ட் மாகாணத்தில் தாடியை ஷேவ் செய்யவும், ட்ரிம் செய்யவும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். மேலும், தடையை மீறி யாராவது தாடியை ஷேவ் செய்கிறார்களா என்பதைத் தாலிபான்கள் மாறுவேடத்தில் கண்காணிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய விதிகளை மீறும் வகையில் உள்ளதால் முடியை ஸ்டைலாக வெட்டுவதற்கும் ஷேவ் செய்யவும் தாலிபான்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்கன் ஆட்சி
1996- 2001 தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு மனித உரிமைகள் ஒடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் பெண் உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டன. அதேபோல ஆண்கள் ஷேவ் மற்றும் ட்ரிம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. சிறு தவறு செய்யும் நபர்களுக்கும் பொது இடங்களில் வைத்து பயங்கர தண்டனைகள் கொடுக்கப்படும். மேலும், அந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடமாக இருந்தது.
அமெரிக்க படைகள்
அந்த சமயத்தில் ஆப்கனில் இருந்து தான் இரட்டை கோபுர தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினார் ஒசாமா பின் லேடன். இதன் பின்னரே நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த அமெரிக்கப் படைகள் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான போரைத் தொடங்கினர். அமெரிக்கப் படைகளின் வருகைக்குப் பின்னரே, ஆப்கனில் இருந்த தாலிபான்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கப் படைகளை ஆப்கனில் இருந்து வெளியேறியதுமே, மீண்டும் ஆப்கனை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்தச் சூழலில் தாலிபான் ஆட்சியில் எங்கு ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.