மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா எடுத்த அதிரடி முடிவு
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ள அந்நாட்டு அரசு வேக்சின் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதேபோல ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தான் இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் கொரோனா வைரசுக்கு தப்பவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் அது பெரியளவில் பயன் தருவதில்லை.
சீனாவில் கொரோனா
சீனாவின் வூஹான் நகரில் முதலில் கொரோனா பரவ தொடங்கிய போது, மிகக் கடுமையான ஊரடங்கை அந்நாட்டு அரசு விதித்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நகரிலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். தீவிரமான கொரோனா கட்டுப்பாடுகள், அதிகப்படியான சோதனை உள்ளிட்டவை மூலம் சீனா கொரோனாவை சிறப்பாகக் கட்டுப்படுத்தியது.
கட்டுப்பாடுகள் இல்லை
இதனால் மற்ற நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த போதிலும், சீனா இயல்பு நிலைக்குத் திரும்பியது. கடந்த சில மாதங்களாகவே அங்கு கொரோனா பாதிப்பு பெரியளவு இல்லை. இதனால் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சீன மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர். இந்தச் சூழலில் தான், கடந்த சில நாட்களாகச் சீனாவிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
மீண்டும் கொரோனா
இன்று மட்டும் சீனாவில் புதிதாக 75 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 53 பேருக்கு உள்ளூரில் இருக்கும் ஒருவர் மூலமே வைரஸ் பரவியுள்ளது (local transmissions). கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள நாஞ்சிங் விமான நிலையத்தில் இருந்த பரவ தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு இப்போது 12க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகரித்துள்ளது.
டெல்டா கொரோனா
மற்ற நாடுகளைப் போலவே சீனாவிலும் வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் அதிகரிக்க டெல்டா கொரோனாவே முக்கிய காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா பரிசோதனைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நாஞ்சிங் நகரிலுள்ள 92 லட்சம் பேரிடம் மூன்று முறை கொரோனா பரிசோதனையை அம்மாகாண அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். மேலும், அங்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா நகரங்கள்
சீனாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்று நாஞ்சிங். அதிலும், இப்போது அங்குச் சுற்றுலா சீசன் என்பதால் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரம் நாஞ்சிங் நகருக்கு வந்து சென்றிருப்பார்கள் என அதிகாரிகள் கணித்துள்ளனர். அவர்களை டிராக் செய்யும் பணிகளையும் சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவில் ஜாங்ஜியாஜி, ஹைனான் தீவு எனச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களிலேயே இப்போது வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மருத்துவமனை
மறுபுறம் வெளிநாட்டிலிருந்து வரும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் ஹெனான் மாகாணத்தின் ஜெங்ஜோ நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மூலம் சுமார் 27 பேருக்கு இதுவரை கொரோனா பரவியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து ஜெங்ஜோ நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வேக்சின்
அதிலும் இந்த முறை கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்ட சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது பரவும் டெல்டா கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைந்தாலும்கூட தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் வேக்சின் தடுப்பதால் பொதுமக்கள் விரைவாக வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் வலியுறுத்துகின்றனர்.