அகஸ்டா வெஸ்ட்லேண்ட்: புரோக்கரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவு
துபாய்: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனம் ஃபின்மெக்கானிகாவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு துறை கடந்த 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதன்படி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. ரூ. 3600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.360 கோடியை லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விமான படை முன்னாள் தலைவர் எஸ்பி தியாகி, ஏர் மார்ஷல் ஜே எஸ் குஜ்ரால் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்த ஒப்பந்தம் கிடைக்க இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை நாடு கடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் அவரை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.