அமெரிக்காவில் கடிகாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட மாணவர் கத்தாரில் குடியேறுகிறார்!
வாஷிங்டன்: கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவர் அகமது முகமது மேற்படிப்பை முன்னிட்டு குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேற உள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. சூடான் வம்சாவளியைச் சேர்ந்த அகமது புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் எதிரொலியாக பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக கடிகாரம் ஒன்றைச் செய்து அதனை தனது வகுப்பு ஆசிரியரிடம் பெருமையாக காட்டியுள்ளான் அகமது.
ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதனை வெடிகுண்டு எனத் தவறுதலாக புரிந்து கொண்ட ஆசிரியர், உடனடியாக பள்ளிக்கு போலீசாரை அழைத்துள்ளார். உடனே அகமது கைது செய்யப்பட்டார்.
பின்னர் காவல் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், சிறுவன் மீது தவறு ஏதும் இல்லை உண்மையிலேயே அது கடிகாரம்தான் எனத் தெரியவந்ததையடுத்து அகமது விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அகமதுவுக்கு ஆதரவு பெருக ஜோர்டான், துருக்கி, சூடான் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தார். இதையடுத்து அகமதுவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு வருமாறு அதிபர் ஒபாமா டுவிட்டர் வலைதளம் மூலம் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விண்வெளி அறிஞர்கள் விருந்தில் அகமது முகமது கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா சிறுவனை கட்டி அணைத்து சிறுது நேரம் பேசினார்.
இந்நிலையில், அகமது முகமதுவின் மேற்படிப்புக்காக கத்தார் நாட்டில் குடியேறப் போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகமது கூறுகையில், கத்தாரில் உள்ள தோகா நகரத்தை தாம் அதிகமாக நேசிப்பதாகவும், இங்கு சிறந்த பள்ளிகள் இருப்பதாகவும் அதன்மூலம் தாம் கற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.