பாக கோளாறும், விமானியின் தவறுமே 162 பேரின் உயிரை காவு வாங்கிய ஏர் ஏசியா விமான விபத்திற்கு காரணம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு கோளாறான பாகமும், விமானியின் தவறும் தான் காரணம் என்று இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் கிளம்பிய ஏர் ஏசியா விமானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 162 பேரும் பலியாகினர். அதில் 56 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
விமானம் விபத்துக்குள்ளானதற்கு மோசமான வானிலை காரணம் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து இந்தோனேசியாவில் உள்ள தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டியினர் விசாரணை நடத்தி வந்தார்கள். அவர்கள் தங்களின் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளனர்.
விமானம் வானில் பறக்கையில் வால் பகுதியை கட்டுப்படுத்தும் சிஸ்டமின் எலக்ட்ரானிக் பாகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே கம்ப்யூட்டர் சிஸ்டம் நான்கு முறை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை சரி செய்ய விமானி கம்ப்யூட்டர் சிஸ்டத்தை ரீசெட் செய்துள்ளார். இதனால் ஆட்டோபைலட் செயல் இழந்து பின்னர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கோளாறு இதற்கு முன்பு கடந்த ஆண்டு மட்டும் 23 முறை ஏற்பட்டுள்ளது. கோளாறு ஏற்படுகையில் கம்ப்யூட்டர் சிஸ்டமை ரீசெட் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.