இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர்ஏசியாவின் ஒரு கருப்பு பெட்டி மீட்பு
ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர்ஏசியா விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் மற்றும் விமான பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது.
48 உடல்கள்
ஜாவா கடலில் இருந்து இதுவரை 48 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயணிகளின் உடல்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
கருப்பு பெட்டி சிக்னல்
விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே இருந்து கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 முறை
கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் வால் பகுதி கிடந்த இடத்தில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் இரு வேறு இடங்களில் இருந்து வந்தது. இதையடுத்து சிக்னல் வந்த இடத்தில் கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்தது.
கண்டுபிடிப்பு
சிக்னல் வந்த இடத்தில் கடலுக்கு அடியில் 99-106 அடி ஆழத்தில் கருப்பு பெட்டி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்கும் பணி இன்று துவங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு பெட்டியை மீட்கும் பணி நடந்து வருகிறது.
விமானம்
விமானம் விபத்துக்குள்ளாக மோசமான வானிலை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.