ஏர்ஏசியா பயணிகள் உடல்கள் சீட்டில் சிக்கியிருக்க வேண்டும்
சிட்னி: இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் விமான இருக்கைகளில் தான் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்தில் தேடல் பணி துவங்கியது.
ஜாவா கடலில் இருந்து இதுவரை ஒரு விமான பணிப்பெண் உள்பட 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹயாத்தி லுத்பியா ஹமீது(48) என்ற பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சுரபயா நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ் ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும். விமானத்தின் உடைந்த உடற்பகுதி வழியாக வெளியே வந்த உடல்கள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
விமானம் மோசமான வானிலையை எதிர்கொண்டதால் பயணிகள் நிச்சயம் சீட் பெல்ட் அணிந்திருப்பார்கள். அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும் என்றார்.