இனி விமானி அறையில் 2 பேர் கட்டாயம் இருக்கணும்: வருகிறது புதிய விதி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விபத்தை அடுத்து பல விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன.
லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் ஏர்பஸ் ரக விமானம் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் விமானத்தை துணை விமானி லுபிட்ஸ் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியது தெரிய வந்துள்ளது.
விமானி அறையில் இருந்து கேப்டன் வெளியே சென்ற நேரத்தில் அந்த அறையின் கதவை பூட்டிக் கொண்டுள்ளார் லுபிட்ஸ். அறையில் தனியாக இருந்த அவர் விமானத்தை மலை மீது மோத வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் லுபிட்ஸ் உள்பட விமானத்தில் இருந்த 150 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்தை அடுத்து உலக விமான நிறுவனங்கள் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்துகின்றன. அதாவது விமானி அறையில் எப்பொழுதும் இரண்டு பேர் இருக்க வேண்டும். கேப்டனோ, துணை விமானியோ விமானி அறையில் இருந்து வெளியே சென்றால் அவர்களை தனியாக இருக்க விடாமல் துணைக்கு சிப்பந்தி ஒருவர் இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் விமானிகள் தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதை தவிர்க்கலாம் என்று விமான நிறுவனங்கள் கருதுகின்றன.