3 அல் ஜசீரா நிருபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை
கெய்ரோ: தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பொய்யான செய்தியை பரப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 3 அல் ஜசீரா செய்தியாளர்களுக்கு எகிப்து கோர்ட் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. கனடா குடியுரிமை பெற்றவரான முகம்மது பாஹ்மி, ஆஸ்திரேலிய செய்தியாளர் பீட்டர் கிறிஸ்ட், எகிப்தைச் சேர்ந்த பஹர் முகம்மது ஆகியோருக்கே தற்போது தண்டனை தரப்பட்டுள்ளது.
அதேபோல அல் ஜசீராவுக்காக பணியாற்றி வரும் மேலும் 3 பேருக்கும் இதே அளவிலான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 செய்தியாளர்களும், முஸ்லீம் பிரதர்ஹுட் கட்சியுடன் இணைந்து, தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஆனால் தாங்கள் அப்பாவிகள் என மூன்று பேரும் வாதிட்டிருந்தனர்.
தாங்கள் செய்தியாளராக மட்டுமே செயல்பட்டதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இந்த மூன்று பேரும் உரிய பிரஸ் உரிமம் இல்லாமல் வேலை பார்த்ததாக எகிப்து அரசு குற்றம் சாட்டியது. வழக்கு விசாரணையின் இறுதியில் இவர்களுக்குத் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மறு விசாரணை கோரி மூன்று பேரும் மனு செய்தனர். இதை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த கோர்ட் தண்டனையை நிறுத்தி வைத்து 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தது. அதன் பின்னர் மறு விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையின் இறுதியில் தற்போது தண்டனையைக் குறைத்து 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு உலக அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது முட்டாள்தனமான தீர்ப்பு என்று அல் ஜசீராவும் வர்ணித்துள்ளது.