லாகூரில் பாக். அல்கொய்தா தலைவன் 'அப்தாலி' சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டுக்கான அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அப்தாலி லாகூர் அருகே மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினர் பல்வேறு நாடுகளில் பதுங்கி தீவிரவாத செயலை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில் அந்த இயக்கத்தினர் லாகூர் நகரில் உள்ள உளவுப்படை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும், முக்கிய அரசியல்வாதிகளை கொல்லப்போவதாகவும் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு கமாண்டோ படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கமாண்டோ படையினர் லாகூர் பகுதியில் கடந்த 29-ந் தேதி தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். லாகூர் அருகே உள்ள சேகுபுரா மாவட்டத்தில் அல்கொய்தா இயக்கத்தினர் கட்டுமான பணி நடந்து வரும் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தனர்.
உடனே அவர்களை கமாண்டோ படையினர் சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டான்.