சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு ஏமன் அல்-கொய்தா பொறுப்பேற்பு!
சனா: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்று வீடியோ வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி சகோதரர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பத்திரிக்கை ஆசிரியர், 4 கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர். நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டதால் சார்லி ஹெப்டோவை தாக்கி பழிவாங்கியதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
அந்த தீவிரவாதிகளில் ஒருவரான சயித் குவாச்சி ஏமனுக்கு சென்று அல் கொய்தா அமைப்பினரிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். இதனால் இந்த தாக்குதலை நடத்துமாறு ஏமனில் உள்ள அல் கொய்தா அமைப்பு உத்தரவிட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பின் ஏமன் பிரிவு பொற்றுப்பேற்று வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அரேபிய தீபகற்பத்தின் அல் கொய்தா தலைவரான நஸ்ர் அல் அன்சி பேசுகிறார். நபிகள் நாயகத்திற்காக பழிவாங்க சார்லி ஹெப்டோவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் சாத்தானின் பக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். அல் கொய்தாவின் ஏமன் பிரிவு தக்க நபரை தேர்வு செய்து, திட்டமிட்டு, தெளிவாக தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.