போட்டுத் தள்ளுவோம்... வங்கதேச நடிகர்களுக்கு அல்கொய்தா எச்சரிக்கை!
நியூயார்க்: வங்கதேசத்தில் மத கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் நடிகர்களும், எழுத்தாளர்களும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள் என அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
வங்காளதேசத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க வாழ் வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அவிஜித்ராய் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். முஸ்லிம் மத கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் அங்கு தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில், சமீபத்தில் புத்தக பதிப்பாளர்கள் பைசல் அரிபின்திபான், அகமது ரகீம் துதுல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் பைசல் அரிபின் திபாஸ் பரிதாபமாக இறந்தார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட எழுத்தாளர் அவிஜித்ராய் புத்தகங்களை வெளியிட்டவர்கள் ஆவர். இவர்களது படுகொலைக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், டுவிட்டர் இணைய தளத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள், எழுத்தாளர்களை விட புத்தகம் வெளியிடுபவர்கள்தான் மிக மோசமானவர்கள். இவர்கள் மத கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்களை வெளியிட்டு எழுத்தின் மூலம் மத சிந்தனையில் வெறி கொண்டவர்களை பணம் சம்பாதிக்க உதவி செய்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
அதற்கு ‘அடுத்த இலக்கு யார்? என்று தலைப்பிட்டு தீவிரவாதிகள் மேலும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், செய்தி பத்திரிகை மற்றும் வார, மாத இதழ் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் நடிகர்கள் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் விடுத்துள்ளனர்.