ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? களமிறங்கிய ஜெர்மனி டாக்டர்ஸ்.. சிக்கலில் புடின்!
மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸை ஏ நாவல்னி உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து தற்போது இவர் ஜெர்மனிக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளின் முகமாக பார்க்கப்படும் நாவல்னி அங்கு விமான பயணம் ஒன்றில் மயங்கி விழுந்து, கோமாவிற்கு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சேர்பியாவில் இருந்து மாஸ்கோவிற்கு விமானத்தில் வந்தவர், விமானத்திலேயே மூச்சு விட முடியாமல் திணறி, அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார்.
இவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி திடீரென கோமாவிற்கு சென்றார் என்பது இன்னும் புதிராக இருக்கிறது. இவரின் ஆரோக்கியம் தொடர்பாக வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது.
Fake News Buster: சாலை முழுக்க சேறும், சாக்கடையும்.. வாரணாசி சாலையா இப்படி? உண்மை என்ன?
என்ன காரணம்
இவரின் இந்த நிலைக்கு காரணம் புடின்தான் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின்தான் எதிர்க்கட்சி முகமான நாவல்னியை கொலை செய்ய திட்டமிட்டு இப்படி செய்துள்ளார் என்கிறார்கள். நாவல்னி குடித்த டீயில் விஷம் கலக்கப்பட்டது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சிகிச்சை பார்க்கும் செர்பியாவை சேர்ந்த மருத்துவர்கள் இந்த தியரியை மறுத்துள்ளனர்.
மறுப்பு ஏன்
இவரின் உடலில் அப்படி விஷம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் நாவல்னி ஆதரவாளர்கள் வைக்கும் புகாரே வேறு. நாவல்னி உடலில் முழுமையாக விஷம் கலக்கும் வரை அவரை சிகிச்சைக்கு எடுக்கவில்லை. செர்பிய மருத்துவர்கள் புடின் சொல்வதை கேட்டு செயல்படுகிறார்கள். எப்படி ஒரு நபர் டீ குடித்துவிட்டு, கோமாவிற்கு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
மோசமானது
அதிலும் நாவல்னிக்கு அவசரமாக சிகிச்சை அளிக்கவும் செர்பிய மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் தற்போது அவர் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதையடுத்து தற்போது நாவல்னி கட்சியின் வேண்டுகோளின்படி ஜெர்மனி மருத்துவர்கள் நாவல்னிக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். நாவல்னி இதனால் தற்போது ஜெர்மனி எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
பெரிய சந்தேகம்
முதலில் நாவல்னி உடல் சரியாக இல்லை, அவரை இடமாற்றம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறி செர்பிய மருத்துவர்களை அவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் ஜெர்மனி மருத்துவர்கள் நாவல்னி உடலை நேரில் சோதனை செய்துவிட்டு, நாவல்னியை இடமாற்றம் செய்யலாம், அவரின் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கும் என்று கூறி உள்ளனர். இதில் செர்பிய மருத்துவர்களின் செயல் சந்தேகம் அளிப்பதாக ஜெர்மனி அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
என்ன அவசரம்
செர்பிய மருத்துவர்கள் அவசரப்பட்டு விஷம் குறித்த மறுப்பை தெரிவித்துள்ளனர். இதில் எதோ மர்மம் இருக்கிறது. இன்னும் முழுமையாக நாவல்னி உடலை சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் விஷம் சாப்பிட்டாரா என்று கண்டுபிடிக்க முடியும் , ஆனால் செர்பியா இதில் அவசரப்படுகிறது என்று ஜெர்மனி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் புடின் தற்போது சிக்கலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஜெர்மனி இதில் தலையிட்டு உள்ளதால், புடின் இதில் மேலும் எதையும் மறைக்க முடியாது என்கிறார்கள்.