அகதிகளிடம் அல்ஜீரியா அட்டூழியம்.. கர்ப்பிணிகள், குழந்தைகளை கூட சஹாரா பாலைவனத்திற்கு விரட்டும் கொடுமை
Recommended Video
லண்டன்: கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா 13,000 புலம்பெயர்ந்தோரை (அகதிகளை) சஹாரா பாலைவனத்திற்கு திருப்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அல்ஜீரியாவால் வெளியேற்றப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். சஹாரா பாலைவனத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
சில நேரங்களில் துப்பாக்கி முனையில் இப்படி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் வேறு சிறு நகரத்திற்கு நீர் ஆதாரத்துடன் நடந்தே செல்ல வேண்டும். உடலில் நீர் சத்து வற்றி அவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம்.
அடித்து விரட்டப்பட்ட அகதிகள்
சிலர் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மரணமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் சஹாரா பாலைவனத்தில் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் என வேறுபாடு கிடையாது. அகதிகளிடம் பணம், பொருட்களை பறித்துக்கொண்டு, அவர்கள் அடித்து விரட்டிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொடர் வெளியேற்றம்
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் சில அகதிகளை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அல்ஜீரியா கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
அல்ஜீரியா நடவடிக்கை
அல்ஜீரியா இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது . இந்த தகவல்களை செய்தி ஏஜென்சி ஒன்று வெளியிட்டுள்ளது. ஆனால் இதை அல்ஜீரியா மறுத்துள்ளது.
ஐரோப்பா நடவடிக்கை
அல்ஜீரியாவுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெளியேற்றப்படுவோர் எண்ணிக்கையும் அதிகம் போல தெரிகிறதாம். ஐரோப்பிய ஒன்றியம், லிபியாவில் கடத்தல் பாதைகளை மூடுவதற்கு முயற்சிகளை எடுத்துவருவதால், அல்ஜீரியாவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதாக கூறப்படுகிறது.