கேமராவில் சிக்கிய “ஏலியன்” சுறா – முதன்முதலாக புகைப்படம் வெளியிட்ட சிட்னி மியூசியம்
சிட்னி: சிட்னி அருங்காட்சியகம் ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கின்ற அரியவகை சுறாவான கோப்ளின் சுறாவை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.
பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினம் கோப்ளின் சுறா.
"த டீப் ஏலியன்" அதாவது ஆழ் கடலின் ஏலியன் என்றழைக்கப்படும் இது ஆழ்கடலின் மிக ஆழத்திலேயே இருப்பதால் பலர் இதை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
புகைப்படம் வெளியீடு:
இந்நிலையில், சிட்னியில் உள்ள அருங்காட்சியகம் கோப்ளின் சுறாவின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளது.
மிரட்டும் பற்கள்:
புகைப்படத்தில் சிறிய கத்திகளை போன்ற தோற்றம் கொண்ட அதன் பற்கள் பார்ப்பவருக்கு மிரட்சியை உண்டாக்குகிறது.
தலையால் கவ்வி வேட்டை:
கோப்ளின் சுறா அதன் இரையை கண்டறிந்ததும் தன் நெற்றியில் மண்வெட்டி வடிவத்தில் உள்ள சிறப்பு உடலமைப்பினால் அதன் சதைப்பிடிப்பான பகுதிகளை கவ்வி இழுத்து சில நொடிகளில் இரையை வேட்டையாடும்.
வசீகரிக்கும் தாடை அமைப்பு:
இந்த விலங்கின் தாடை நுட்பம் வசீகரமானது என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியக மீன் சேகரிப்பு மேலாளர் மார்க் மெக்ரோத்தர் தெரிவித்துள்ளார்.
காட்சியகத்தில் ஒப்படைத்த மீனவர்:
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரைப்பகுதியான ஈடனில் 200 மீட்டர் ஆழத்தில் (656 அடி) இந்த அரிய வகை மீனை பிடித்த மீனவர் இதன் மதிப்பை உணர்ந்து உள்ளூர் மீன் பண்ணையில் கொடுத்தார்.
பொதுமக்கள் பார்வைக்கு:
தற்போது இந்த கோப்ளின் சுறா சிட்னியில் உள்ள அருங்காட்சியகதில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.