இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 54 பேரின் உடல்கள் மீட்பு
ஜகார்தா: இந்தோனேசியாவில் மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 54 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பேருடன் ட்ரிகானா ஏர் சர்வீஸ் விமானம் ஒன்று ஓக்சிபிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் பிங்டாங் மாவட்டத்தில் உள்ள மலை மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த பகுதியில் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்த 5 குழந்தைகள் உள்பட 54 பேரின் சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
விமானம் முழுவதும் சேதமடைந்து துண்டு, துண்டுகளாக கிடந்தது. விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமானத்தின் ஒரு பகுதி தீ்ப்பிடித்து எரிந்துள்ளது. விமான பாகங்கள் சில எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. பயணிகளின் உடல்கள் மோசமாக சிதைந்துள்ளன. சில உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன என்றார்.