பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஸ்ஸாக் வீட்டில் துப்பாக்கி முனையில் சூறையாடிய திருடர்கள்
லாகூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டிலிருந்து விலைமதிப்பற்ற பல்வேறு பொருட்களை திருடர்கள் திருடிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து ரஸ்ஸாக் கூறுகையில், முகமூடி அணிந்த சிலர் எனது வீட்டுக்குள் அதிகாலையில் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி எனது பாஸ்போர்ட், தங்கம், பணம் உள்ளிட்டவற்றை திருடினர். அதன் பின்னர் அவர்கள் ஓடிப் போய் விட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால் துப்பாக்கி முனையில் புகுந்த திருடர்களால் நானும் எனது குடும்பத்தாரும் தவித்துப் போய் விட்டோம். எங்களை அது அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது என்றார்.
கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தான் அணியில் இடம் பெற முடியாமல் இருந்து வந்தார் ரஸ்ஸாக். காயம் காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருடர்கள் வேறு அவரை பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டனர்.
பாத்ரூம் ஜன்னல் வழியாக திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி பாஸ்போர்ட், 8000 டாலர் பணம், 2500 பவுண்டு இங்கிலாந்துப் பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர்.
இதுகுறித்து லாகூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.