தைவான் எல்லைக்குள் 40 முறை பறந்த சீனா போர் விமானங்கள் - தைவான் அதிபர் புகார்
கிழக்கு ஆசியாவில் வேண்டுமென்றே பதற்றத்தை தூண்டும் வகையில் சீனா நடந்து கொள்வதாக தைவான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஜிங்: கிழக்கு ஆசியா பகுதிகளில் போர் பதற்றத்தை தூண்டும் வகையில் தைவான் வான்வெளி எல்லைக்கோட்டை கடந்து சீனா 40 முறை போர் விமானங்களை பறக்க விட்டு அச்சுறுத்தியுள்ளதாக தைவான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனப் போர் விமானங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரதான நிலப்பகுதியையும் சுயராஜ்ய தீவையும் கிட்டத்தட்ட 40 முறை எல்லைக் கோட்டை கடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா அண்டை நாடுகளுடன் சமீபகாலமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டு வருவது போலவே, தைவானையும் சீண்டி வருகிறது சீனா.
தைவான் தனக்கே சொந்தம் என்றும் உரிமை கோரி வருகிறது. இதனால், சீனாவின் சண்டியர் தனத்தை அடக்க, தைவானுக்குத் தேவையான ராணுவ உதவிகள், ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து அந்நாட்டுக்கு பாதுகாப்பும் அளித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டிரம்ப் நிர்வாகம் தைவானுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது.
டிரம்ப் அமைச்சரவையை சேர்ந்த வெளியுறவு துணை அமைச்சரான கெய்த் க்ரச் தலைமையிலான உயர்நிலை குழு தைவான் சென்றுள்ளது. இது கடந்த 2 நாட்களாக அங்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நெருக்கத்தை விரும்பாத சீனா, தைவான் வான் எல்லைக்குள் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மொத்தம் 18 சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் பறந்தன. அவற்றில் இரண்டு விமானங்கள் வெடிகுண்டு வீசுபவை என்று தெரிவித்துள்ளது.
சீனாவுடன் 12 மணிநேரத்துக்கும் மேலாக இரவிலும் பேச்சுவார்த்தை! மத்திய அரசு அதிகாரியும் பங்கேற்பு
சனிக்கிழமையன்றும் 2வது நாளாக 19 போர் விமானங்களை தைவான் நாட்டு வான் எல்லைக்கள் பறக்கவிட்டு, சீனா தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது. இது, தைவானை மிரட்டும் வகைலும் அதற்கு உதவி செய்யும் அமெரிக்காவை எச்சரிக்கை செய்யும் வகையிலும் இருந்தது.
தைவானின் முன்னாள் அதிபர் லீ டெங் ஹுய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தைவானின் அதிபர் சாய் இங் வென் அமெரிக்க துணை அமைச்சர் கெய்த் க்ரச் மற்றும் உயர்மட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றிருந்த போது சீன போர் விமானங்கள் இந்த அத்துமீறலில் ஈடுபட்டன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தைவானின் அதிபர் சாய் இங் வென் சீனாவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள், குறிப்பாக கடந்த சில நாட்களில், அவர்களின் வார்த்தை தாக்குதல்கள் மற்றும் ராணுவ அச்சுறுத்தல்களின் ஒரு பகுதியாக விமானத்தை பறக்க விட்டு அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தென் சீன கடல் முதல் தனது அண்டை நாடுகள் அனைத்திலும் எல்லை போரில் ஈடுபட்டு, உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீன முயற்றி செய்கிறது. சீனா அச்சுறுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.