ட்ரம்பை சுற்றியுள்ளவர்கள் எங்களுடன் போர் புரிய தூண்டிவிடுகின்றனர்.. ஈரான் அமைச்சர் பரபர தகவல்
துபாய்: கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு உச்சகட்ட பதற்றத்தில் உள்ள நிலையில், போரை விரும்பவில்லை என ஈரான் கூறியுள்ளது. ஈரான் நாட்டின் உயர்மட்ட தூதர் ஒருவர், இரு நாடுளுக்கிடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளார்.
ஈரான், ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைவிதித்தது. அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தடையால் ஈரானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.
இந்நிலையில் தங்கள் மீதான பொருளாதார தடைகள் விலக்கி கொள்ளப்படாவிட்டால், அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி செயல்பட போவதாக ஈரான் எச்சரித்தது. இதனையடுத்து ஈரான் - அமெரிக்கா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு நாளுக்கு நாள் பதற்றம் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் போர் பதற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈரான், தங்கள் நாடு எந்த நாட்டுடனும் தேவையில்லாமல் போர் புரிய விரும்பவில்லை என்றும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஈரானால் அதனை எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கிருந்த தனது தூதரக ஊழியர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததற்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்த உச்சகட்ட பதற்றமான சூழலில் கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜவாத் ஷெரீப், தற்போதைய சூழலில் போர் ஏதும் மூளாது. ஏனென்றால் நாங்கள் போர் செய்வதை இந்த சூழலில் விரும்பவில்லை. மேலும் இந்த பிராந்தியத்தில் எங்களை போர் மூலம் சந்திக்க யாரும் விரும்பவில்லை என்று தெளிவாக தெரிகிறது என்றார்.
எக்ஸிட் போல் முடிவுகளை மாலை 6.30-க்குப் பின் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையம்
மேலும் பேசிய அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் இறுக்கியுள்ளார். ட்ரம்பின் நிர்வாகம் எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் இது ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் உளவியல் போர் மற்றும் அந்நாட்டின் அரசியல் விளையாட்டுகளில் ஒன்று என ஜவாத் ஷெரீப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா ஏற்கனவே மீண்டும் ஒரு போரை விரும்பவில்லை என அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டது ஆனால் ட்ரம்பை சுற்றியுள்ளவர்கள் அவரை ஈரானுடன் போர் செய்யுமாறு தூண்டிவிட்டு வருகின்றனர் அவர்களின் எண்ணம் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவை வலு பெற செய்ய வேண்டும் என்பதாக உள்ளது என ஜவாத் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்