ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு: இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 25வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, மான்டேனெக்ரோ, மேசிடோனியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள், இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
சர்வதேச விசாரணை...
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை முழுமையாக தோல்வி அடைந்துவிட்ட நிலையில், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ஆதாரம் உள்ளது...
உள்நாட்டு போரின்போது, 40,000 தமிழர்கள் வரை, இலங்கை ராணுவத்தினரால் அமைதிப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கான பலமான ஆதாரத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. நிபுணர்களும் வெளியிட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அங்கு தனிப்பட்ட மற்றும் நம்பகத்தன்மை கொண்ட விசாரணை தேவை.
மறுவாழ்வுப் பணிகள்...
இலங்கையில் கண்ணிவெடி அகற்றுதல், மறுகட்டமைப்பு மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பணிகளில், வரும் ஓராண்டுக் காலத்துக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அந்நாட்டு அரசு வெளிப்படுத்த வேண்டும்.
எழுத்துப்பூர்வ அறிக்கை....
இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடக்க உள்ள 27வது கூட்டத் தொடரில் தெரிவிக்க வேண்டும். அடுத்த செப்டம்பரில் நடக்கும் கூட்டத்தில், அவர் எழுத்துப்பூர்வமாக இதை சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை வேண்டும்....
மேலும், உள்நாட்டு போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், தமிழர் பகுதிகளில் ஏராளமான அளவு ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும். இவர்களால் மனித உரிமைகள் தொடரப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம்' என இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு...
வரும் 26ம் தேதி இலங்கை விவகாரம் விவாத்துக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. அன்றைய தினம், அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
முந்தைய தீர்மானங்கள்....
இதற்கு முன்னதாக ஏற்கனவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த இரண்டு தீர்மானங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது.