விபத்தில் பறி போன காது.. விலா எலும்பின் உதவியோடு கையில் காது வளர்த்த டாக்டர்கள்!
விபத்தில் காதை இழந்த அமெரிக்க பெண் ராணுவ வீரருக்கு புதிய காது பொருத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.
Recommended Video
டெக்சாஸ்: விபத்தில் காதை இழந்த அமெரிக்க பெண் ராணுவ வீரருக்கு, முழங்கையில் செயற்கையாக புதிய காதை வளர்த்து, மீண்டும் பழைய இடத்தில் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஷாமிகா புர்ராஜ்(21). ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர், எதிர்பாராத விதமாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். மிஸ்சிசிப்பியில் இருந்து போர்ட் பிலிஸ்நகருக்கு காரில் வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
முன்புற டயர் வெடித்ததில், இவரது கார் 700 அடி தூரம் உருண்டு சென்று விபத்திற்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஷாமிகாவின் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. அவரது இடதுபுற காது முழுவதும் சேதமடைந்தது.
ஷாமிகாவுக்கு டெக்சாஸ் எல்பாசோவில் உள்ள வில்லியம் பியூமண்ட் ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு மீண்டும் காது பொருத்த பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஷாமிகாவின் விலாவில் இருந்து குறுத்தெலும்பு எடுக்கப்பட்டு, அதில் புதிய ரத்த நாளங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் அது ஷாமிகாவின் முழங்கையில் காது போன்ற வடிவில் வளர்க்கப்பட்டது.
தொடர் சிகிச்சையின் பலனாக அந்தக் காது முழுமையாக வளர்ச்சி அடைந்தது. அதனைத் தொடர்ந்து அந்தக் காதை முழங்கையில் இருந்து அகற்றிய மருத்துவர்கல், ஷாமிகாவின் இடதுபுற காது இருந்த பகுதியில் அதனை பொருத்தினர். தற்போது அந்தக் காது நல்ல முறையில் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை டெக்சாஸ் எல் பாசோ ராணுவ மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஓவன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
“இந்தப் புதிய காதை உருவாக்க நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால், தற்போது நான் மீண்டும் முழுமையானவளாக மாறி விட்டேன்” என ஷாமிகா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.