ஐநா சபை முன் அமெரிக்கத் தமிழர்கள்... அனிதாவுக்காக 4வது வாரமாகப் போராட்டம்!
நியூயார்க் (யு.எஸ்): அனிதாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் தொடந்து கொண்டிருக்கிறது. வரும் சனிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை நியூயார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த உள்ளார்கள்.
அங்கு கூடுவதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் முதல், இரண்டாவது அவென்யுகளுக்கு இடையே 47வது தெருவில் அமைந்துள்ள ஐநா பூங்காவில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது..
அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வருமாறு, ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியூயார்க், கனெக்டிகட், நியூஜெர்ஸி, டெலவர் மாநிலங்களிலிருந்து தமிழர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, சான் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
அனிதாவுக்கு நீதி, நீட் தேர்வுக்குத் தடை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பப் பெறுதல், நீட் தொடர்பான தமிழக அரசின் மசோதாக்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
சான் ஃப்ரான்சிஸ்கோ துணைத்தூதரக அதிகாரியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசி தூதரகத்தில் மனு வழங்க, இன்று வெள்ளிக்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற துணைத் தூதரகங்களில் சந்திப்புக்கு நேரம் கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அனுமதிக்கு காத்திருக்கிறார்கள்.
இந் நிலையில், சனிக்கிழமை ஐநா சபை முன்பாக தமிழர்கள் ஒன்று கூடி அனிதாவுக்கு நீதி கேட்டு கோரிக்கையை வலியுறுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
'வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்' என்று அழைக்கப்படும் பிரதமர் மோடிக்கு, இத்தகைய போராட்டங்கள் அழுத்தம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-இர தினகர்