அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு இரண்டாவது வாரமாக அமெரிக்கத் தமிழர்கள் போராட்டம்!
வாஷிங்டன்(யு.எஸ்): அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் இரண்டாவது வாரமாக தொடர்கிறது.
கடந்தவாரம் சனிக்கிழமை முதல் அனிதாவுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் இன்னொரு மரணம் நடக்க விடக்கூடாது என்று உறுதிமொழியும் எடுத்து வருகின்றனர்
கலிஃபோர்னியா, கனெக்டிகட், டெலவர், ஃப்ளோரிடா, ஜார்ஜியா, இலனாய், மேரிலாண்ட், மிஷிகன், மிசோரி, மினசோட்டா, வடக்கு கரோலைனா, நியூ ஜெர்ஸி, ஒஹாயோ, பென்சில்வேனியா, தெற்கு கரோலைனா, டெக்சாஸ், வர்ஜினியா ஆகிய 17 மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அஞ்சலி செலுத்துவதுடன், குடியரசுத்தலைவருக்கு மனுவிலும் கையெழுத்திட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டமாக இது நீதி கேட்கும் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இந்தவாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்து நகரங்களில் அனிதாவுக்கு நீதி கேட்கும் கூட்டம் நடைபெற இருக்கிறது.
நியூ யார்க் - வெள்ளிக்கிழமை - இரவு 7 மணி - Cunningham Park, Queens, NY
நியூ யார்க் - சனிக்கிழமை - காலை 9:30 மணி - 605 Calkins Road, Rochester, NY
விஸ்கான்ஸின் - சனிக்கிழமை - காலை 10 மணி- 19900 River Rd, Brookfield, WI
கலிஃபோர்னியா- சனிக்கிழமை- மாலை 5 மணி- Griffith Park Center, Los Angeles,CA
மிஷிகன் - ஞாயிற்றுக்கிழமை - காலை 11 மணி - Rochester Hills, MI
கூடுதலாக 5 முதல் 10 நகரங்களில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தவிர சமூக வலைத்தளங்களிலும் விழிப்புணர்வு கருத்தாய்வுகள் பெரிய அளவில் அமெரிக்கத் தமிழர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
குடியரசுத் தலைவருக்கு, இந்திய தூதரகங்கள் வழியாக மனு அனுப்புவதற்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மனுவில் அனிதா மரணத்திற்கு நீதி, இத்தகைய மரணங்கள் நேராதவாறு தடுக்க அரசின் நடவடிக்கைகள், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வருதல் போன்ற கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு, நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் தமிழக அரசின் இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளுக்கு போராட முன்வரும் அமெரிக்கத் தமிழர்களின் தன்னெழுச்சி பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.
- இர தினகர்