ஐநா சபை உள்ளே வெளியுறவுத் துறை அமைச்சர்... வெளியே தமிழர்கள் அனிதாவுக்கு நீதி கேட்டு போராட்டம்!
நியூயார்க்(யு.எஸ்): ஐக்கிய நாடுகள் சபையின் 72 வது கூட்டத்தொடரில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நியூயார்க் வந்துள்ளார். அவர் ஐநா சபையில் உரையாற்றி அதே நாளில், வெளியே ஐநா பூங்காவில் அமெரிக்கத் தமிழர்கள் அனிதாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு தடை கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நியூயார்க், நியூஜெர்ஸி, டெலவர், பிலடெல்ஃபியா, மேரிலாண்ட், கனெக்டிகட், வர்ஜீனியா மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் பெருவாரியான தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்கேற்றவர்களில் பலர், தாங்கள் வளர்ந்து படித்து வந்த கிராமப் பின்னணியையும் , கல்வி மூலம் அமெரிக்கா வரையிலும் வந்து சாதிக்க முடிந்ததையும் நினைவு கூர்ந்தார்கள். கிராமப்புற பின்னணியில் அரசுப் பள்ளியில் படித்த பலரும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களிலும், ஆராய்ச்சிக்கூடங்களிலும் நிபுணர்களாக விளங்குவதை சுட்டிக் காட்டினார்கள்.
'இந்தியாவில் ஒட்டு மொத்த வளர்ச்சியில், தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு, அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் உயர் கல்வி பயின்று வளர்ச்சிக்கு வித்துட்டுள்ளார்கள். தமிழகத்தின் கல்வி நிலையங்களின் தரமும், உயர்கல்வியில் மாணவர்களின் தேர்ச்சியும் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்து விளங்குவதாக பல ஆய்வுகளும் ,அரசு செய்திகளும் கூறுகின்றன. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியை உபயோகித்துக் கொள்கின்றனர் என்று Social Economics Index காட்டுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் கல்வித் தரம் இருக்கும் போது, நீட் எனும் தேர்வு மூலம் பலருடைய கல்விக் கனவுகள் கலைக்கப் பட்டுள்ளது. மருத்துவர் ஆகியிருக்க வேண்டிய மாணவி அனிதா மரணத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மாநிலக் கல்வி மூலம் அமெரிக்கா வரை வந்து பலதுறைகளிலும் சிறப்புடன் விளங்கும் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கப்படும் வரையிலும் பல வடிவங்களில் அமெரிக்கத் தமிழர்களின் போராட்டம் தொடரும்' என்று கூறினார்கள்.
முன்னதாக அமெரிக்கா முழுவதும் 35 மாநிலங்களில் தன்னெழுச்சியுடன் தமிழர்கள், அனிதாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு தடை கேட்டும் அஞ்சலி கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். மாற்று நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்களும் நடைபெற்று வருகின்றன. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை, உலகத் தமிழ் அமைப்பு, பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் விளக்கக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை, ஐநா சபையின் 72வது கூட்டத்தொடரில் உரையாற்ற, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐநா தலைமையகத்தின் உள்ளே இருக்கும் போது, வெளியே ஐநா பூங்காவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் முக்கிய நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
அனிதாவின் மரணத்திற்கு நீதி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை , தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கி, தமிழக நலனுக்காக அமெரிக்கத் தமிழர்களின் தொடர் போராட்டங்கள் அமெரிக்காவில் பிற இனத்தவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஐநா சபை உள்ளே இந்திய வெளியுறவுத் அமைச்சர் 72 வது கூட்டத்தொடரில் பங்கேற்ற போது, வெளியே 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே', 'வேண்டும் வேண்டும் அனிதாவுக்கு நீதி வேண்டும்', 'வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்' போன்ற தமிழர்களின் முழக்கங்கள் விண்ணை முட்டியது.
- இர தினகர்