உளவில் ஓட்டை! தீவிரவாதிகளை தாக்கியபோது, தனது நாட்டுக்காரரையும் சேர்த்து கொன்ற அமெரிக்கா!
வாஷிங்டன்: தீவிரவாதிககளுக்கு எதிரான தாக்குதலின்போது, தவறுதலாக தனது நாட்டு பிணை கைதியையும் சேர்த்து அமெரிக்கா கொலை செய்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில், கடந்த ஜனவரி மாதம், அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிட வளாகம் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. அதில், அல்-கொய்தா தலைவர்களாக பணியாற்றி வந்த 2 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து இரண்டு பிணைக்கைதிகளும் தவறுதலாக பலியானதாக தெரியவந்துள்ளது. இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை தற்போது அறிவித்துள்ளது.
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர், ஒபாமா, அத்தாக்குதல் விவரங்களை எடுத்துக் கூறினார். இந்த செயலுக்கு, தானே முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் ஒபாமா கூறினார்.
பலியான பிணைக்கைதிகளின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
அந்த கட்டிடத்தில், அப்பாவிகள் யாரும் இல்லை என்று உளவு துறை அளித்த தகவல்கள் அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்கர் இருந்தது தெரியாமல், தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாகவும் ஒபாமா கூறினார்.
கொல்லப்பட்ட பிணைக்கைதிகளில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் வாரன் வெய்ன்ஸ்டீன் (73) ஆவார். அவர் 2011ம் ஆண்டில் அல்-கொய்தாவால் கடத்தப்பட்டு பிணைக்கைதியாக இருந்தார். மற்றொருவர், இத்தாலி நாட்டு தொண்டு நிறுவன ஊழியர் கியோவன்னி லோ போர்ட்டோ ஆவார். அவர் 2012ம் ஆண்டில் இருந்து பிணைக்கைதியாக இருந்தார்.
கொல்லப்பட்ட அல்-கொய்தாவைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அகமது பரூக், ஆடம் கடான் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில், ஆடம் கடான், பல்வேறு அல்-கொய்தா வீடியோ படங்களில் தோன்றியவர்.