இந்தியர்களின் கருப்புப் பணம் குவிந்துள்ள ஜெனீவா எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிரடி ரெய்டு!
ஜெனீவா: ஜெனீவா நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் மோசடி செய்து ஏமாற்ற வங்கி நிர்வாகம் உதவியதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இங்குள்ள வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவிலும் இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டது எச்எஸ்பிசி. இதன் ஜெனீவா கிளைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இந்தியர்களின் கருப்புப் பணமும் பெருமளவில் இங்கு புதைந்துள்ளது.
இதுகுறித்து ஜெனீவா அரசு வழக்கறிஞர் கூறுகையில், பண மோசடி தொடர்பாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே சோதனை நடத்தப்பட்டது. வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் கூட பல்வேறு தனி நபர்களும் கூட விசாரிக்கப்படுவார்கள். எச்எஸ்பிசி வங்கியின் சுவிட்சர்லாந்து தலைமையகத்திலும், சில கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது என்றார் அவர்.
இந்த வங்கியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தாமல் மோசடி செய்வதற்கு வங்கி நிர்வாகமே உதவியதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. இதன் மூலம் ஸ்விஸ் அரசுக்கு 119 பில்லியன் டாலல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வங்கி மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் இந்தியர்கள் பலர் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளனர். இவர்கள் குறித்த பட்டியல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக இந்திய அரசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியே மோசடிப் புகாரில் சிக்கி விசாரணைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.