சிக்கிம் விவகாரத்தை திசை திருப்ப காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் சீனா!
காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்பட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க சீனா விரும்புவதாக தெரிவித்துள்ளது.
பெய்ஜீங்: சிக்கிம் விவகாரத்தை மறைப்பதற்காகவும், இந்திய- பாகிஸ்தான் இடையே பிரச்சினை ஏற்படவும் காஷ்மீர் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய சீனா விரும்புகிறது என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா-பூடான்- திபெத் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய ராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது கடுங்கோபத்தில் உள்ளது.
டோக்லாமில் வீரர்கள்
இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க சீனா எந்தவிதமான நடவடிக்கை எடுக்காத நிலையில் உலக நாடுகள் முன்பு நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக சீனா மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில்...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சினையை பேசி தீர்த்து வைத்து அதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க சீனா விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
கவலை தெரிவிக்கிறது
காஷ்மீர் எல்லை பிரச்சினையால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமான தெற்காசிய நாடுகள். ஆனால் தற்போது காஷ்மீர் விவகாரமானது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அமைதியை குலைக்கிறது
காஷ்மீர் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இரு நாடுகளின் ஒட்டுமொத்த பகுதியுமே அமைதியின்றி காணப்படுகிறது. எல்லையில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட உகந்த சூழலை இருநாடுகளும் உருவாக்க வேண்டும். அதற்கு சீனா தனது ஆக்கப்பூர்வமான பங்கை அளிக்க விரும்புகிறது என்றார் அவர்.
மூன்றாம் நாடு தலையிட வேண்டாம்
காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சினையாகும். இதில் மூன்றாவது நாடு தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை இந்தியா விரும்பவில்லை. மேலும் சிக்கிமில் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிந்துள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்த சீனா முயற்சிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.