ஆப்கான் விமான விபத்தில் திருப்பம்.. விழுந்து நொறுங்கியது அமெரிக்க போர் விமானமாம்.. என்ன நடந்தது?
திடீர் திருப்பமாக நேற்று ஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் விழுந்த இந்த விமானம் போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் என்று கூறப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து நேற்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமானம் சென்றுள்ளது.
அப்போது காஸ்னி அருகே விமானம் விபத்திற்கு உள்ளாகி, கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் 737-400 விமானம் விபத்திற்கு உள்ளானது என்று கூறப்பட்டது.
என்ன விமானம்
விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்று குறித்து விவரம் இன்னும் வெளியாகவில்லை.இந்த விபத்து நடந்த பகுதி தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அங்கு இதனால் மீட்பு பணியை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகே முழுமையான மீட்பு பணியை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது.
தலிபான் என்ன சொன்னது
இது தொடர்பாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ள தலிபான், அமெரிக்க படைகளின் விமானம்தான் எங்கள் பகுதியில் விழுந்துள்ளது. அந்த விமானத்தில் பயணித்த எல்லோரும் பலியாகி விட்டனர். எல்லோரும் விமானப்படை அதிகாரிகள். இதை பயணிகள் விமானம் என்று அமெரிக்கா கூறுகிறது. அது முழுக்க முழுக்க பொய். இது பயணிகள் விமானம் கிடையாது. விமானப்படை விமானம்தான் நாங்கள் இதை நேரில் பார்த்தோம் என்று தாலிபான் கூறியுள்ளது.
அமெரிக்கா மறுப்பு
இதை அமெரிக்கா நேற்று மறுத்தது. அதில் எங்கள் விமானப்படையின் விமானம் எதுவும் கீழே விழவில்லை. ஆப்கானிஸ்தானில் நிறைய விமானங்கள் அமெரிக்க விமானப்படை சார்பாக ரோந்து பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் இதுவரை விமானம் எதுவும் விழுந்ததாக எங்களுக்கு தகவல் எதுவும் வரவில்லை. தலிபான்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதை நம்ப வேண்டாம் என்றார்கள்.
விமானம் நிறுவனம் மறுப்பு
இதையடுத்து எரியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம்தான் கீழே விழுந்தது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்த விமான நிறுவனமும் இதை மறுத்தது. எங்கள் விமானம் விழவில்லை என்று அந்த நிறுவனம் கூறியது. அதேபோல் சமூக வலைத்தளங்களில், அமெரிக்கா விமானப்படை விமானம் விழுந்ததற்கான ஆதாரங்கள் வெளியானது. அமெரிக்காவின் ரோந்து விமானமான Bombardier E-11A விழுந்து நொறுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கா ஒப்புக்கொண்டது
இந்த நிலையில் அமெரிக்கா இதை கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்கள் விமானப்படையின் Bombardier E-11A விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் ரோந்து பணிகளை செய்து வந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்துவிட்டது, என்றுஅமெரிக்கா கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதில் பயணித்த 83 பேரின் நிலை என்ன என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.