அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி!
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
போர்ட்பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று மாலை 5 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது.
இதனால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. இந்த நிலநடுக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டு 9.1 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகி பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.