ஆப்பிள் பறிக்க வாறீகளா.. இங்கல்ல அமெரிக்காவில்!
சிகாகோ: அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஆப்பிள் சீசன் ஆரம்பிச்சாச்சு.
கோடையில் நம் மக்கள் கூடை கூடையாக மாம்பழம் சாப்பிட்டு கொண்டாடுவது போல எல்லோரும் குதூகலமாக ஆப்பிள் சாப்பிடும் காலம் வந்தாச்சு. அமெரிக்காவில் இதை ஒரு வித்தியாசமான முறையில் மக்கள் வரவேற்கிறார்கள். அது வழக்கம் போல கடையில் வாங்கி சாப்பிடுவது போல அல்லாமல் ஆப்பிள் தோட்டத்துக்கே சென்று தம் கையால் பறித்து சாப்பிடும் சுக அனுபவம். அப்படியான ஒரு அழகான அனுபவத்தை உங்களோடும் பகிர்ந்துகொள்ள இதோ ஆரம்பிக்கிறது ஆப்பிள் தோட்டத்து பயணம் .
மேலை நாடுகளில் எப்படி "ஆப்பிள் பிக்கிங்" அனுபவத்தை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
ஆப்பிள் அதிக விளைச்சல் உள்ள இடங்களில் ஆப்பிள் பார்ம் (ஆப்பிள் தோட்டங்களில்) செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை ஆப்பிள் தோட்டங்கள் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கிறது. குறிப்பிட்ட நுழைவு சீட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து டாலருக்கு வாங்கி விட்டால் போதும். அப்புறம் நம் கையில் ஒரு கூடை கிடைத்து விடும். அப்புறம் ஆப்பிள் தோட்டத்துக்கு ஜாலியாக ஒரு டிராக்டர் வண்டியில் ஏறி பயணிக்கலாம்.
அப்படியே அந்த டிராக்டர் வண்டி நம்மை ஆப்பிள் தோட்டத்துக்கு அழைத்து சென்று விடும். நம் விழிகள் கொத்து கொத்தாக காத்திருக்கும் ஆப்பிள் மரங்களை கண்டு அகல திறக்கும். ஒரு குழந்தையென மனம் மாறும். நம் கையால் ஆப்பிளை பறித்து அந்த கூடையில் நிரப்பி விட்டு ஜாலியாக வீடு திரும்பலாம். அப்படியே அங்கேயே ஒரு கடி கடித்து ஆப்பிளின் சுவையில் நம்மை மறக்கலம்.
எப்போதும் எல்லா சீசனிலும் கடைகளில் ஆப்பிள் கிடைத்தாலும் ஆப்பிள் சீசனில் வரும் ஆப்பிள்களின் சுவை தனி. அதை விட ஆப்பிள் தோட்டத்திலேயே நாமே பறித்து சாப்பிடும் கனிகளின் சுவை அலாதியோ அலாதி.
இதோ சிகாகோவிலிருந்து ஒரு ஆப்பிள் பறிக்கும் இனிய அனுபவம் உங்களுக்காக...!
என்ன ஆப்பிள் பறிக்க வர்றீங்களா அமெரிக்காவுக்கு?
- Inkpena சஹாயா.