மனைவி உயிருக்கு ஆபத்து.. காப்பாற்றுங்கள்.. கேரளாவில் காணாமல் போன அயர்லாந்து பெண்ணின் கணவர் உருக்கம்
கேரளாவில் காணாமல் போன தன் மனைவி லீகாவை கண்டுபிடித்து தரும்படி அவரது கணவர் ஆண்ட்ரு ஜோர்டன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் காணாமல் போன தன் மனைவி லீகாவை கண்டுபிடித்து தரும்படி அவரது கணவர் ஆண்ட்ரு ஜோர்டன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். லீகா அயர்லாந்தில் இருந்து கேரளாவிற்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி வந்துள்ளார்.
லீகாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவர் தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்.
இந்த நிலையில் இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கேரளா அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போதுதான் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எப்போது காணாமல் போனார்
லீகா கடந்த பிப்ரவரி 4ம் தேதி கேரளாவிற்கு வந்துள்ளார். மார்ச் 4ம் தேதில் கோவளத்தில் உள்ள மருத்துவமனையை விட்டு வெளியே சென்றுள்ளார். கடற்கரையில் யாருடனோ பேசிக்கொண்டே சென்று இருக்கிறார். பின் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. லீகாவுடன் இந்தியாவிற்கு அவரது கணவர் வரவில்லை, மாறாக அவரது தங்கை இசியுடன் இந்தியா வந்துள்ளார்.
போலீசில் தகவல்
இந்த நிலையில் லீகாவின் கணவர் ஆண்ட்ரு ஜோர்டன் 17ம் தேதி இந்தியா வந்துள்ளார். இதுகுறித்து கோவளம் போலீசிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று வாரமாக அவரை போலீஸ் அலைக்கழித்து இருக்கிறது. சிசிடிவி கேமராவை பார்க்க கூட ஒருவாரம் எடுத்துள்ளனர்.
உயிருடன் இருக்கிறார்
இதுகுறித்து ஆண்ட்ரு ஜோர்டன் கூறும் போது, ''என் மனைவி உயிருடன் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் உயிருக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் அவருக்கு எதோ பெரிய ஆபத்து நிகழ்ந்து இருக்கிறது. அவர் இப்போது சரியான சூழ்நிலையில் இல்லை. அவரை காப்பற்ற வேண்டும்'' என்றுள்ளார்.
மக்களிடம் உதவி
போலீஸ் உதவாததை அடுத்து அவர் மக்களிடம் உதவி கேட்டுள்ளார். நேற்று கேரளா ரேடியோ ஒன்றில் பேசிய அவர் ''என் மனைவியை மக்கள்தான் கண்டுபிடித்து தர வேண்டும். அவர்களுக்கு நான் 1 கோடி கூட சன்மானம் கொடுக்கிறேன். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் இதுகுறித்து பேச வேண்டும். என் மனைவியை காப்பாற்ற வேண்டும்'' என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.