மனிதன் மறந்த மனிதம்.. பேசாம நாமளும் குரங்காவே இருந்துருக்கலாமோ.. வைரலாகும் புகைப்படம்!
Recommended Video
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஆற்றில் சிக்கியவருக்கு மனித குரங்கொன்று உதவி செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஊரே பற்றி எரிந்தால் கூட அதனை செல்போனில் பதிவு செய்வதில் தான் நம்மவர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்களைக் கூட காப்பாற்ற மறந்து, அதனை செல்போனில் பதிவு செய்பவர்களைப் பார்த்தால் மனிதநேயம் செத்து விட்டதோ என்ற சந்தேகம் தான் நமக்கு ஏற்படும்.
செல்போன்களின் ஆதிக்கத்தால் தான் இப்படி மனிதர்கள் மாறிப் போய் உள்ளனர். இதற்கு பேசாமல் குரங்காகவே மனிதன் இருந்திருக்கலாம் என்ற ஆதங்கம் அவ்வப்போது நமக்குள் எழும். அதனை உறுதி செய்வது போல் ஒரு சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் அழிந்து வரும் மனித குரங்குகளை பாதுகாப்பதற்காக தனியார் அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. சமீபத்தில் அந்த அமைப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் குரங்குகள் அதிகம் வாழும் வனப்பகுதியில் மற்றும் அருகில் இருந்த ஆற்றில் உலவும் விஷப் பாம்புகளை பிடித்து வெளியேற்றுவதற்காகச் சென்றிருந்தார்.
பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் சேறு நிறைந்த பள்ளத்தில் அவர் சிக்கிக் கொண்டார். அந்த சகதியில் இருந்து எப்படி வெளியேறுவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மனித குரங்கு ஒன்று வந்தது. அது சகதியில் சிக்கி நின்ற ஊழியரைப் பார்த்ததும், அவருக்கு உதவிக்கரம் நீட்டியது. வழக்கம் போல், இந்தக் காட்சியை அப்பகுதியில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ஒருவர் புகைப்படமாக பதிவு செய்தார். சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஆபத்தில் இருப்பவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக உதவிக்கு வந்த அந்த குரங்கின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.