சீக்கிரமா தீயை அணைங்க.. எங்க வீடெல்லாம் எரிஞ்சு போச்சு.. பைலட்டை அதிர வைத்த "ஆந்தை"!
கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. காட்டுத் தீயை அணைக்கப் போன தீயணைப்புப் படை வீரரின் ஹெலிகாப்டருக்குள் புகுந்த ஆந்தை ரொம்ப நேரமாக அதை விட்டுப் போகாமல் கூடவே வந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது சியர்ரா தேசிய வனப் பூங்கா. இங்கு சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.
டேன் ஆல்பினர் என்ற பைலட் ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர் இதுபோல தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலிருந்தடி கீழே தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த ஹெலிகாப்டருக்குள் ஒரு ஆந்தை பறந்து வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த டேன் அதிர்ச்சி அடைந்தார். இப்படி ஒரு பறவை திடீரென உள்ளே புகுந்ததால் அவர் முதலில் பீதியடைந்து விட்டார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்!
பறந்து வந்த ஆந்தை
ஆனால் உள்ளே புகுந்த ஆந்தை எதுவும் செய்யாமல் அமைதியாக ஒரு சீட்டின் மீது அமர்ந்து வழக்கம் போல அதன் உற்றுப் பார்வையை டேன் மீது செலுத்தியபடி சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. வேறு எதுவும் செய்யவில்லை. இதனால் ஆச்சரியமடைந்த டேன் அதை அப்படியே போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி அந்த ஆந்தை அமைதியாக அமர்ந்திருந்தது.
திரும்பிச் சென்றது
பின்னர் எந்த வழியாக வந்ததோ அதே வழியில் அப்படியே பறந்து சென்று விட்டது. வானில் பறக்கும் பறவைகள் ஹெலிகாப்டர் மீதும், விமானங்கள் மீதும் மோதிய சம்பவங்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உள்ளே பறந்து உட்கார்ந்த செயல் இதுதான் முதல் தடவை என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் டேன் எடுத்த இந்த போட்டோ இப்போது வைரலாகி விட்டது.
நல்லவேளை ரவுண்டு அடிக்கலை
நல்லவேளை அந்த ஆந்தை ஹெலிகாப்டருக்குள் "சுற்றுலா" போகாமல் விட்டது. போயிருந்தால் ஹெலிகாப்டரின் காக்பிட்டில் ஏதாவது கருவி பழுதாகி விபத்து கூட நேர்ந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அந்த ஆந்தை எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. எங்க வீடெல்லாம் எரிஞ்சு போச்சு அங்கிள்.. சீக்கிரமா தீயை அணைங்கன்து அது சொல்லாமல் சொல்லி விட்டுப் போனதாகவே கருத வேண்டியுள்ளது.
அழியும் இயற்கை
உலகெங்கும் காட்டுத் தீயால் அரிய உயிரினங்கள், தாவரங்கள், மூலிகைச் செடிகள் அழிவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தால் மிகப் பெரிய பாதிப்பை இயற்கை சந்தித்தது. இந்த நிலையில் இந்த ஆந்தையின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.. யோசிக்க வைத்துள்ளது. இதற்கிடையே, கலிபோர்னியா காட்டுத் தீவிபத்தில் கிட்டத்தட்ட 541 சதுர மைல் பரப்பளவிலான காட்டுப் பகுதி சேதமடைந்துள்ளதாம். 23 பேர் காயமடைந்துள்ளனர். 900க்கும் மேற்பட்ட வீடுகளும் கூட சேதமடைந்துள்ளன.. அதில் இந்த ஆந்தையின் கூடும் ஒன்றாக இருக்கக் கூடும்!